திராவிட இயக்கத்தின் எழுச்சி,தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி),சுயமரியாதை இயக்கம்

 திராவிட இயக்கத்தின் எழுச்சி

திராவிட இயக்கம் பிராமண மேலாதிக்கத்திற்கு எதிராகப் பிராமணர் அல்லாதவர்களைப் பாதுகாக்கும் இயக்கமாக உதயமானது. 1909இல் பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 


1912இல் டாக்டர் சி. நடேசனார் எனும் மருத்துவர் மதராஸ் ஐக்கிய கழகம் எனும் அமைப்பை உருவாக்கினார் இது பின்னாளில் மதராஸ் திராவிடர் சங்கம் என்று மாறியபின் திராவிடர்களின் மேம்பாட்டிற்கான உதவிகளைச் செய்தது. பிராமணர் அல்லாத பட்டதாரிகளுக்கு உதவுவது அவர்களைக் கற்கவைப்பது ஆகியவற்றோடு அவர்களது குறைபாடுகள் குறித்து விவாதிக்க முறையான கூட்டங்களையும் நடத்தியது. இதே சமயத்தில் நடேசனார் தங்கும் விடுதி வசதியில்லாததால் பிராமணரல்லாத மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதால் அதைச் சரிசெய்யும் வகையில் திருவல்லிக்கேணியில் (சென்னை) ஜூலை 1916இல் திராவிடர் இல்லம் என்ற பெயரில் ஒரு தங்கும் விடுதியை நிறுவினார். மேலும் பிராமணர் அல்லாத மாணவர்களின் நலன் கருதி இவ்வில்லம் ஒரு இலக்கிய அமைப்பையும் கொண்டிருந்தது.


தென்னிந்திய நல உரிமைச்சங்கம் (நீதிக்கட்சி)

1916 நவம்பர் 20இல் டாக்டர் நடேசனார்சர் பிட்டி தியாகராயர்டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (South Indian Liberal Federation) உருவாக்க ஒருங்கிணைந்தனர். இதே சமயம் 1916 டிசம்பரில்விக்டோரியா பொது அரங்கில் நடைபெற்ற கூட்டமொன்றில் பிராமணரல்லாதோர் அறிக்கை வெளியிடப்பட்டது. இவ்வறிக்கை பிராமணரல்லாத சமூகங்களின் கருத்துக்களைத் தெளிவுபடக்கூறியது.

இவ்வமைப்பு தொடங்கி வெளியிட்ட மூன்று செய்தித்தாள்களாவனகட்சியின் கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காகத் தமிழில் திராவிடன் ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ்தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.

மாகாண அரசுகளில் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்த பின்னர் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1920இல் முதல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று இந்தியாவின் முதல் அமைச்சரவையை சென்னையில் அமைத்தது A. சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார். மேலும் நீதிக்கட்சி 1920-1923 மற்றும் 1923-1926 ஆகிய ஆண்டுகளில் அரசமைத்தது. 

காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்த சூழலில் நீதிக்கட்சி 1937இல் தேர்தல் நடைபெறும் வரை ஆட்சி தொடர்ந்து நீடித்தது. 1937 தேர்தல்களில்முதன் முதலாகப் பங்கேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் நீதிக்கட்சியை படுதோல்வி அடையச் செய்தது.

திட்டங்களும் செயல்பாடுகளும் 

நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று. நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தி அரசியல் தளத்தில் அவர்களுக்கென இடத்தை உருவாக்கியது.

சாதி மறுப்புத் திருமணங்களைக் கட்டுப்படுத்திய சட்டச் சிக்கல்களை நீதிக் கட்சியினர் அகற்றியதோடு பொதுக் கிணறுகளையும் நீர் நிலைகளையும் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் பயன்படுத்துவதை தடுத்த தடைகளைத் தகர்த்தனர் ஒடுக்கப்பட்ட பிரிவு குழந்தைகள் பொதுப்பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென நீதிக்கட்சியின் அரசு ஆணை பிறப்பித்தது. இச்சமூகக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென 1923இல் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன. நீதிக்கட்சியின் கீழிருந்த சட்டமன்றம்தான் முதன் முதலாக தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை 1921இல் அங்கீகரித்தது. இத்தீர்மானம் பெண்களுக்கென இடத்தை ஏற்படுத்தியதால் 1926இல் முத்துலட்சுமி அம்மையார் இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது.

பல்வேறு சமூகங்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நீதிக்கட்சி வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பான சட்டங்களை இயற்றும் பணிகளை மேற்கொண்டது. சமூக நீதியை நிலைநாட்டுவதின் ஒரு பகுதியாக பல்வேறு சாதிகளையும் சமூகங்களையும் சார்ந்தவர்களுக்கு அரசுப்பணிகளில் சேர்வதற்கு சமமான வாய்ப்புகளை உறுதி செய்யும் பொருட்டு இரண்டு வகுப்புவாரி அரசாணைகள் (1921 செப்டம்பர் 16 மற்றும் 1922 ஆகஸ்ட் 15) இயற்றப்பட்டன. நிர்வாக அதிகாரங்களை அனைத்து சமூகத்தினரும் பங்கிட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வண்ணம்அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை நீதிக்கட்சி அமைத்தது. இம்முறையைப் பின்பற்றி பிரிட்டிஷ் இந்திய அரசு 1929இல் பொதுப் பணியாளர் தேர்வாணையத்தை உருவாக்கியது.

இவைகள் தவிர சமய நிறுவனங்களை சீர்திருத்துவதிலும் நீதிக்கட்சி கவனம் செலுத்தியது. நீதிக்கட்சி 1926இல் இந்து சமய அறநிலையச் சட்டத்தை இயற்றியது. அதன்படி எந்தவொரு தனிநபரும்சாதி வேறுபாடின்றி கோவில்களின் நிர்வாகக் குழுக்களில் உறுப்பினராகவும் கோவிலின் சொத்துக்களை நிர்வகிக்கவும் வழிவகை செய்யப்பட்டது. 



சுயமரியாதை இயக்கம்


சுயமரியாதை இயக்கம் (Self Respect Movement) சடங்குகளும் சம்பிரதாயங்களும் இல்லாத சாதிகளற்ற பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடற்ற ஒரு சமூகத்தை இவ்வியக்கம் ஆதரித்தது. பகுத்தறிவும் சுயமரியாதையும் அனைத்து மனிதர்களின் பிறப்புரிமை எனப் பிரகடனம் செய்த இவ்வியக்கம் சுயாட்சியைக் காட்டிலும் இவை முக்கியமானவை எனும் கருத்தை உயர்த்திப் பிடித்தது. பெண்களின் தாழ்வான நிலைக்கு எழுத்தறிவின்மையே காரணம் என அறிவித்த அவ்வியக்கம் அனைவருக்கும் கட்டாயத் தொடக்கக் கல்வியை வழங்கும் பணிகளை மேற்கொண்டது.

இவ்வியக்கம் பெண் விடுதலை கோருதல், மூடநம்பிக்கைகளை நீக்குதல் மற்றும் பகுத்தறிவை வலியுறுத்துதல் போன்ற கோரிக்கைகளை கோரியது. மேலும் இவ்வியக்கம் சீர்திருத்தத் திருமணம் அல்லது சுயமரியாதைத் திருமணங்களை ஆதரித்தது.

சுயமரியாதை இயக்கம் பிராமணர் அல்லாத இந்துக்களின் நலன்களுக்காக மட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் நலனுக்காகவும் போராடியது. இஸ்லாமின் மேன்மை மிகுந்த கோட்பாடுகளான சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை சுயமரியாதை இயக்கம் பாராட்டியது.
பெரியார் ஈ.வெ.ரா
பெரியார் ஈ.வெ.ராமசாமி (1879-1973) சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆவார்.





இவர் ஈரோட்டை சேர்ந்த செல்வந்தரும் வணிகருமான வெங்கடப்பர், சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாவார். ஓரளவு முறையான கல்வியைக் கற்றிருந்தாலும் தன் தந்தையால் ஆதரிக்கப்பட்ட அறிஞர்களுடன் விவாதங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இளைஞராக இருந்தபோது ஒருமுறை வீட்டைவிட்டு வெளியேறிய அவர் பல மாதங்கள் வாரணாசியிலும் ஏனைய சமயம் சார்ந்த மையங்களிலும் தங்கியிருந்தார். வைதீக இந்து சமயத்துடன் ஏற்பட்ட நேரடி அனுபவங்கள் இந்து சமயத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளைத் தகர்த்தன. வீடு திரும்பிய அவர் சில காலம் குடும்பத் தொழிலான வணிகத்தை கவனித்து வந்தார். அவருடைய சுயநலமற்ற பொதுச் சேவைகளும், தொலைநோக்குப் பார்வையும் அவரை புகழ்பெற்ற ஆளுமை ஆக்கின. ஈரோட்டின் நகரசபைத் தலைவர் பதவி (1918-1919) உட்பட பல பதவிகளையும் அவர் வகித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் பதவி வகித்தபோது ஒடுக்கப்பட்ட மக்களின் கோவில் நுழைவு உரிமை குறித்த தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். சாதி தர்மம் என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள வீதிகளிளும் நுழைவது மறுக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நடைமுறையினை வைக்கம் (திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு சுதேசி அரசு, தற்போதைய கேரள மாநிலத்திலுள்ள ஒரு நகரம்) மக்கள் எதிர்த்தனர். எதிர்ப்பின் தொடக்கக் கட்டங்களில் மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் பெரும்பங்கு வகித்தார். உள்ளூர் தலைவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் பெரியார் இந்த இயக்கத்திற்கு தலைமையேற்றதால் சிறையிலடைக்கப்பட்டார். மக்கள் அவரை 'வைக்கம் வீரர்' எனப் பாராட்டினர். இதே சமயத்தில் சேரன்மாதேவி குருகுலப் பள்ளியில், உணவு உண்ணும் அறையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு நிலவுவதைக் கேள்வியுற்று மனவருத்தமடைந்தார். இக்குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிதியுதவியில் வ.வே. சுப்பிரமணியம் எனும் காங்கிரஸ் தலைவரால் நடத்தப் பெற்றது. இதனைப் பெரியார் கண்டித்து எதிர்த்த பின்னரும், குருகுலத்தில் நடைபெறும் சாதிப்பாகுபாட்டை காங்கிரஸ் தொடர்ந்து ஆதரித்ததால் மனமுடைந்தார்.




பெரியார் 1925 இல் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் முக்கியத்துவத்தைப் பெரியார் புரிந்து கொண்டார். குடிஅரசு (1925) ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) போன்ற பல செய்தித்தாள்களையும் இதழ்களையும் பெரியார் தொடங்கினார். சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரபூர்வ செய்தித்தாள் குடி அரசு ஆகும். ஒவ்வொரு இதழிலும் சமூகம் பிரச்சனைகள் தொடர்பான தனது கருத்துகளைப் பெரியார் வழக்கமான கட்டுரையாக எழுதினார். அவ்வப்போது சித்திரபுத்திரன் எனும் புனைப் பெயரில் கட்டுரைகளை எழுதினார்.


பௌத்த சமய முன்னோடியும், தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதியுமான சிங்காரவேலருடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். B.R. அம்பேத்கார் எழுதிய சாதி ஒழிப்பு (Annihilation of caste) எனும் நூலை, அந்நூல் வெளிவந்தவுடன் 1936இல் தமிழில் பதிப்பித்தார். B.R. அம்பேத்கார் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தனித்தேர்தல் தொகுதிக் கோரிக்கையை பெரியாரும் ஆதரித்தார்.

1937இல் இராஜாஜியின் தலைமையிலான அரசின் செயல்பாட்டினை எதிர்க்கும் விதமாக, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிமுகம் செய்ததற்கு எதிராகப் பெரியார் மக்கள் செல்வாக்கு பெற்ற இயக்கத்தை நடத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டமானது (1937-39) தமிழ்நாட்டு அரசியலில் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்துக்காக பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். பெரியார் சிறையில் இருந்தபோதே நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் பின்னர் நீதிக்கட்சி சுயமரியாதை இயக்கத்துடன் இணைந்தது. அதற்கு 1944இல் திராவிடர் கழகம் (திக) எனப் புதுப்பெயர் சூட்டப்பெற்றது.

சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த இராஜாஜி (1952-54) பள்ளிக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திய தொழில் கல்வி பயிற்சித் திட்டமானது, மாணவர்களுக்கு அவர்களின் தந்தையர்கள் செய்து வந்த தொழில்களில் பயிற்சியளிப்பதாக அமைந்தது. இதை குலக்கல்வித் திட்டம் (சாதியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை) என விமர்சித்த பெரியார் இத்திட்டத்தை முழுமையாக எதிர்த்தார். இதற்கு எதிராக பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள் இராஜாஜியின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது. கு. காமராஜ் சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார். பெரியார் தன்னுடைய தொண்ணூற்று நான்காவது வயதில் (1973) இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னையில் பெரியார் திடலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெரியார், ஒரு பெண்ணியவாதி

பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார். குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார். 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கியதிலிருந்து, பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார். “திருமணம் செய்து கொடுப்பது” எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன என்றார். அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார். பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.

பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.

1989இல் தமிழக அரசு, மாற்றங்களை விரும்பிய சீர்த்திருத்தவாதிகளின் கனவை நனவாக்கும் வகையில் 1989ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து வாரிசுரிமைச் சீர்திருத்தச் சட்டத்தை அறிமுகம் செய்தது. அச்சட்டம் முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை உண்டென்பதை உறுதிப்படுத்தியது. முன்மாதிரியாக அமைந்த இந்தச் சட்டம் தேசிய அளவிலும் இது போன்ற சட்டங்கள் இயற்றப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தது.
இரட்டைமலை சீனிவாசன்

இரட்டைமலை சீனிவாசன் (1859-1945) 1859ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்தார். சாதிப்படி நிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார். அவருடைய தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களால் அவர் சிறப்புச் செய்யப்பட்டார். அவரது சுயசரிதையான ஜீவிய சரித சுருக்கம் 1939இல் வெளியிடப்பட்டது.) இந்நூல் முதன் முதலாக எழுதப்பெற்ற சுயசரிதை நூல்களில் ஒன்றாகும்.




தீண்டாமையின் கொடுமைகளை அனுபவித்த இரட்டைமலை சீனிவாசன் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். 1893இல் ஆதிதிராவிட மகாஜன சபை எனும் அமைப்பை உருவாக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் கூட்டமைப்பு மற்றும் சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் தலைவராகப் பணியாற்றினார்.


B.R. அம்பேத்காரின் நெருக்கமானவரான அவர், லண்டனில் (1930 மற்றும் 1931) நடைபெற்ற முதல், இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்டு சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் கருத்துக்களுக்காகக் குரல் கொடுத்தார். 1932இல் செய்துகொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களுள் அவரும் ஒருவர்.
மயிலை சின்னதம்பி ராஜா

மயிலை சின்னதம்பி ராஜா (1883-1943) மக்களால் எம்.சி. ராஜா என அழைக்கப்பட்ட அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்களில் முக்கியமானவர். ஒரு ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிய அவர் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கான பல்வேறு பாடப்புத்தகங்களை எழுதினார். தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) உருவாக்கியவர்களில் ஒருவராவார். சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினராவார் (1920-1926) சென்னை சட்ட சபையில் நீதிக்கட்சியின் துணைத் தலைவராகச் செயல்பட்டார்.





1928இல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக நீண்டகாலம் பணியாற்றினார்

Comments

Popular posts from this blog

11TH- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

TNPSC Polity Model Question Papers for TNPSC Group Exams | Group 1, Group 2 & Group 4

11TH- STD -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Tnpsc previous year question paper